rpjk;guk; jpUf;Nfhapypy; Njthuk; jpUthrfk; gbg;gjw;F tpjpj;j jil cilg;G

கெஞ்சினால் மிஞ்சுவார்கள் மிஞ்சினால் கெஞ்சுவார்கள்

சீடன் -  குருவே கெஞ்சினால் மிஞ்சுவார்கள் மிஞ்சினால் கெஞ்சுவார்கள் என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா?

குரு - ஆமாம். கேட்டிருக்கிறேன். அதற்கு இப்போது என்ன அவசியம்?

சீடன் - அவசியம் இருக்கிறது குருவே!  தில்லைச்சிதம்பரம் கோயில் அம்பலத்தில் நின்று கொண்டு யாரும் தேவாரம், திருவாசகம் பாடக் கூடாது. பாடுபவர்கள் பூசை முடிந்த பின்னர் மகாமண்டபத்தில் நின்று மட்டும் தேவாரம் பாடலாம்!

குரு - அம்பலத்தில் நின்று தேவார - திருவாசகங்களைப் பாடினால் என்னவாம்? "அருச்சனை பாட்டேயாகும் ஆதலால் சொற்றமிழில் எமைப் பாடுக" என சிவனார் சொன்னதாகச் சேக்கிழார் பெரிய புராணத்தில் பாடியிருக்கிறாரே?

சீடன் - அதெல்லாம் சரிதான். சமயகுரவர்களில் ஒருவரான சுந்தரர் 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்தவன், பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை' என சம்பந்தரைச் சிறப்பிக்கிறார். தமிழிசை கேட்கும் ஆவலால் சிவன் ஞானசம்பந்தருக்கு பொற்தாளம் கொடுத்தான் என்கிறார். பிற்கால தாயுமானவரும் மொழிக்கு மொழி தித்திப்பாக  மூவர் சொலும் தமிழ் கேட்கும் முக்கண்ணன் திருச்செவிக்குத்  தனது தமிழ் வெறும் பிதற்றலா  என்று பாடி இருக்கிறார். .

'தேவரெல்லாம் தொழச்சிவந்த செந்தாள் முக்கண்
செங்கரும்பே! மொழிக்குமொழி தித்திப்பாக
மூவர்சொலும் தமிழ்கேட்கும் திருச்செவிக்கே
மூடனேன் புலம்பிய சொல் முற்றுமோதான்'

எனத் தாயுமானவர் பாடுகிறார்.

அறுபத்து மூன்று நாயன்மார்கள் பெருமை பேசும் பெரிய புராண நுõலை எழுத, "உலகெலாம" என்று சேக்கிழார் பெருமானுக்கு தில்லைத் திருக்கூத்தனே அடியெடுத்துக் கொடுத்தானாம். . திருவாசகம், திருக்கோவையார் பாடல்களை மாணிக்கவாசகர் பாடத்தானே அவற்றை எழுதி, "திருச்சிற்றம்பலமுடையான்' என்று ஆடவல்லானே கைச்சாத்திட்டான் என்கிறார்கள்.  தேவாரப் பாடல்கள் தில்லைக் கோவிலிலிருந்து தான் முதலாவது இராசராசன் சூழ்ச்சி செய்து மீட்டெடுத்தானாம்.  "என்னை இறைவன் நன்றாகப் படைத்னன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்று இறைவனே தமிழில் தோத்திரம் செய்வதை விரும்புவர் என்று குறிப்பிடுகிறார்.

குரு -  நீ சொல்வது சரியென்றால் தில்லைச் தீட்சிதர்களுக்கு தேவார திருவாசகம் மீது ஏன் அப்படி ஒரு வெறுப்பு? 

சீடன் -   பிராமணர்களைப் பொறுத்தளவில் தேவார திருவாசகம் பண்டாரப் பாட்டுக்களாகும். அவற்றை ஓதும் பார்ப்பனர்களைப் பார்க்க முடியாது. எனவேதான் தேவார திருவாசகம் ஓதுவதற்கு ஓதுவார் என்ற புதிய சாதி உருவாக்கப்பட்டது. தில்லை ஆடலரசன் கோயில் அம்பலத்தில் (சைவர்களின் தாய்க் கோயில்) திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாட யாரையும் தில்லைவாழ் தீட்சிகர்கள் நேற்றுவரை  அனுமதிக்கவில்லை.  தேவார திருவாசகங்கள் திருமுறையில் சேர்க்கப்பட்டு, திருமுறைதான் சைவத்தின் அளவை (பிரமாணம்) என்று சைவர்கள் சிலர் உச்சி மீது வைத்து மெச்சினாலும், பிராமணர்களைப் பொறுத்தளவில் அவை பண்டாரப்பாட்டுக்கள்தான்!  இன்னொரு காரணமும் இருக்கிறது. ஏனைய கோவில்கள் போலல்லாது தில்லைச் சிதம்பரத்தில் ஆகம வழிபாட்டு முறைக்குப் பதில் வேதநெறி வழிபாட்டுமுறை இருக்கிறது. வேதநெறி வழிபாடு முழுக்க முழுக்க சமற்கிருதத்தில்தான் நடைபெற வேண்டும்.  மேலும் இந்தச் சூத்திராள் வெறுப்பும் தமிழ் வெறுப்பும் "வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்க பூதபரம்பரை பொலிய" வந்துதித்த ஞானசம்பந்தர் மற்றும் "நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவைகலந்து ஊன்கலந்து உயிர்கலந்து தித்திக்கும்"  திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் போன்ற பிராமணர்கள் மீதும் காட்டப்படுகிறது. அவர்கள் பெயர்களைப் பிராமணர்கள் தங்கள் குழ ந்தைகளுக்கு வைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

குரு -  " கெஞ்சினால் மிஞ்சுவார்கள் மிஞ்சினால் கெஞ்சுவார்கள்" என்று தொடக்கத்தில் சொன்னாயே? அதற்குரிய விளக்கத்தை இன்னும் நீ சொல்லவில்லையே?

சீடன் - குருவே! அந்த நல்ல செய்தியைச் சொல்கிறேன். தமிழக அரசாணை பிறப்பித்த பின்னர் காவல்துறையின் பாதுகாப்போடு சிதம்பரம் போவிலுக்குப் போன ஓதுவார் ஆறுமுகசாமியையும் அவரது ஆதரவாளர்களையும் தீட்சிதகர்கள் கூடி அம்பலத்தில் ஏறாது தடுத்து விட்டனர். அப்போது நடந்த தள்ளு முள்ளில் காவல்துறையினருக்கும் காயம். காவல்துறை சும்மா விடுமா? 11 தீட்சிதர்களைக் குண்டுக் கட்டாகக் கட்டிக் கொண்டு போய் சிறையில் அடைத்துவிட்டது. ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட 46 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்புறம் தொல். திருமாவளவன் ஒரு அறிக்கை விட்டார். கோவில் கட்டியது தமிழ் மன்னர்கள்,  பராந்தகச் சோழன்தான் தில்லைக் கோயில் கருவறையின் மேற்புறத்திற்குப் பொன் வேய்ந்தான், எனவே அந்தக் கோயிலை தமிழக அரசு அரசுடைமை ஆக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடனே தமிழக அரசு அரசாணையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தீட்சிதர்களை எச்சரித்தது. இதனை அடுத்து ஆறுமுகசாமியும் அவர்களது ஆதரவாளர்களும் விடுவிக்கப்பட்டனர். மீண்டும் அம்பலத்தில் தேவார திருவாசகம் பாடப்போன ஆறுமுகசாமியை மாலை மரயாதையோடு தீட்சிதர்களால் வரவேற்றார்கள். 

குரு - இதனை நீதிமன்றம், காவல்துறை என்று அலையாமல் முதலே அம்பலத்தில் தேவாரம் திருவாசகம் பாட விட்டிருக்கலாமே? 

சீடன் - சரியாகச் சொன்னீர்கள்!  அய்ம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் அம்பலத்தில் தேவார திருவாசகம் பாடப்பட்டது. பின்னர்தான் தடை வந்தது. ஆனால் இன்னும் சைவக் கோயில்களில் தமிழ்மொழி வழிவாடு கிடையாது

மடிகட்டிக் கோயிலிலே
மேலுடை இடுப்பினிலே
வரிந்து கட்டிப்
பொடிகட்டி இல்லாது
பூசி யிருகைகட்டிப்
படிகட்டித் தமிழரெனப்
படிக்கட்டின் கீழ் நின்று
கொண்டுதானே உள்ளனர்?

என்ற இழிநிலை தமிழ்மொழிக்கு இந்தக் கணமும் தமிழ்நாட்டிலும் நீடிக்கிறது.   கனடாவிலும் நீடிக்கிறது. தமிழன் கட்டிய கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யப்  பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருககிறது.
(Muzhakkam - March  07,  2008)


தமிழக அரசு உடனடியாக இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வருக

தமிழக அரசிடம் நீண்ட நாள் கோரிக்கையாக ஒரு கோரிக்கையை நாங்கள் கொண்டு வருகின்றோம்.
நம்முடைய நாட்டில் இருக்கின்ற கோயில்களை எல்லாம் மன்னர்கள் கட்டினார்கள் என்பதை படித்திருக்கிறோம்.

சிதம்பரம் கோயில் நம் மன்னர்களால் கட்டப்பட்டதுதான். பராந்தக சோழன்தான் சிதம்பரம் கோயில் கோபுரத்துக்கு பொன் வேய்ந்தான் என்பது வரலாறு. ஆனால் இந்த கோயில் எங்களுக்குத்தான் சொந்தம் என்று சிதம்பரத்தில் உள்ள தீட்சதர்கள் சொந்தம் கொண்டாடியிருக்கின்றார்கள்.

இதுபற்றிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்தது. 1888-லேயே அன்றைய நீதிபதி முத்துசாமி அய்யர், நீதிபதி செப்பேடு ஆகிய இருவர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்திருக்கிறார்கள்.
 

அந்தத் தீர்ப்பில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்களுக்கு சொந்தமானது அல்ல. அது தீட்சதர்களுடைய சொத்தும் அல்ல. அது பொதுக்கோயில் என்று ஆதாரப்பூர்வமாக தீர்ப்பிலே சொல்லியிருக்கின்றார்கள்.
அதுமட்டுமல்ல,
1936-ல் சிதம்பரம் நடராஜர் கோயில் என்பது பொது வழிபாட்டிற்குரிய இடம் என்று இன்னொரு தீர்ப்பிலேயும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இப்படி பல ஆதாரங்கள் உள்ளன. நான் 1982-ல் சிதம்பரத்தில் பேசிய உரை சிதம்பர ரகசியம் என்று நூலாக வெளிவந்துள்ளது. அதில் விரிவாக ஆதார விளக்கங்களை சொல்லியிருக்கின்றேன். எனவே தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசின் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் கீழ் உடனடியாகக் கொண்டு வரவேண்டும். சிதம்பரம் நடராஜன் கோயில் என்பது ஒரு பொது சொத்தே தவிர, அது எந்த ஒரு தனிப்பட்ட வர்களுடைய சொத்தும் அல்ல.

தென்னார்காடு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். அந்த கோரிக்கையில் வலிமை இருக்கிறது. நியாயம் இருக்கிறது. முதல் அமைச்சர் கலைஞர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக அக்கோயிலில் தேவாரம், திருவாசகம் பாட முடிந்தது. அதற்காகக் கலைஞர் அரசைப் பாராட்டுகிறோம். அடுத்த கட்டமாக இந்து அறநிலையத்துறையின்கீழ் அக்கோயிலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.

(7-3-2008 அன்று சென்னை - செய்தியாளர் கூட்டத்தில்
தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பேட்டி)


 

சிதம்பரம் தரும் படிப்பினை என்ன?

சிதம்பரம் நடராசர் கோயிலில் தேவாரம், திருவாசகம் பாடுவது குறித்த சர்ச்சை தற்காலிகமாக முடிவுக்கு வந்து இருக்கிறது என்பதுதான் உண்மை.

வருணவெறி ஆதிக்கமும், சமஸ்கிருத வெறியும், தமிழ்மீது கொண்ட வெறுப்புக் கனலும் கொண்ட ஒரு கூட்டம், மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் ஆட்சியில் பலத்த அடிவாங்கியிருக்கிறது என்பதில் அய்யமில்லை.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை கெஞ்சினால் மிஞ்சுவார்கள், மிஞ்சினால் கெஞ்சுவார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடவுளின் அருகில் இருந்து பூஜை, புனஷ்காரங்களைச் செய்யக் கூடியவர்கள் மென்மையானவர்களாக இருப்பார்கள்; பண்பாளர் களாக, பக்குவப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று அப்பாவித் தனமாக நினைக்கும் மனிதர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் அர்ச்சகர்களான தீட்சதர்களையும், அவர்களின் நடவடிக்கை களையும் பார்த்த பிறகாவது, சரியான முடிவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

வன்முறையில் ஈடுபட்ட தீட்சதர் பார்ப்பனர்களைக் கைது செய்து சிறையில் தள்ளிய பிறகு - தமிழக அரசின் கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகுதான் இப்பொழுது கீழே இறங்கி வந்துள்ளனர் என்பதைக் கவனமாகத் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

சிதம்பரம் கோயில் தீட்சதரும், சிதம்பரம் நகர மன்ற உறுப்பினருமான திரு. சிவராம தீட்சதர் என்ற பார்ப்பனர், இந்து அற நிலையத்துறை ஆணையரின் ஆணையின் மீது நீதிமன்றம் செல்லுவது குறித்து ஆலோசித்துக் கொண்டு இருப்பதாகக் கூறியுள்ளதையும் கவனிக்கவேண்டும்.

இப்பொழுதுகூட என்ன நிலை? திருச்சிற்றம்பல மேடையில் தேவார, திருவாசகம் பாடுவதற்கு முன் கோயில் தீட்சதரின் அனுமதியைப் பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழ் நாட்டுக் கோயிலில், தமிழ்வேந்தர் கட்டிய கோயிலில், பெரும்பாலும் தமிழர்களே சென்று வணங்கும் கோயிலில் அவர்களின் தாய்மொழியான தமிழில் பாடுவதற்கு - சமஸ்கிருதவாதிகளான பார்ப்பன தீட்சதர்களிடம் அனுமதி பெறவேண்டும் என்பது தமிழ் - தமிழர்களின் தன்மான உணர்வுக்கு மரியாதை சேர்ப்பதாக இல்லையே!

ஆறுகால பூஜையை தீட்சதர்கள் முடித்த பிறகு, அனுமதி பெற்று தமிழில் பாடவேண்டும் என்பது கவுரவமாகப் படவில்லையே!

தேவாரம், திருவாசகம் பாடி வணங்குவது, பூஜை, புனஷ்காரம் என்ற வட்டத்துக்குள் அடங்காதா - வராதா? இந்தச் சிந்தனைகள் ஒரு பக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன.


கட்டணம் செலுத்தி திருச்சிற்றம்பல மேடையிலிருந்து கடவுளைத் தொழும் பக்தர்கள் புதிய முடிவின்மூலம் அதிருப்தி அடைந்துள்ளதாக தினமணியில் குடிபுகுந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். காரர் தம் கருத்தை பொதுமக்கள் என்ற முகமூடி அணிந்து தெரிவித்துள்ளார்.

யார் அந்தப் பொதுமக்கள்? அவர்களுக்குத் தமிழ் தெரியாத மொழியா? தீட்சதர்கள் பயன்படுத்தும் சமஸ்கிருதம் மட்டும்தான் அந்தப் பக்தர்கள் அறிந்த மொழியா?

எப்படி எப்படியெல்லாம் பார்ப்பனர்கள் கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுகின்றனர்! இதனைப் பக்திப் போதையில் தமிழர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள் என்ற அபார நம்பிக்கை என்னும் சக்கரத்தில்தான் ஆரியப் பார்ப்பனர்களின் ஆணவப் பயணம் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

தெய்வத் தமிழ் என்றும், கண்ணுதற் பெருங்கடவுளான சிவபெருமானே தமிழ்ச் சங்கக் கூட்டத்தில் அமர்ந்து ஆய்ந்த பசுந்தமிழ் என்றெல்லாம் நம் தமிழ்ப் புலவர்களும், மெய்யன்பர் களும் நெக்குருகிப் பேசுகிறார்களே - இப்பொழுதாவது பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பின் கொடூரம் எத்தகையது என்பதை உணர்வார்களா?
தி.மு.க. ஆட்சி 2006 இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின், சட்டமன்றத்தில் என்ன அறிவிப்பு கொடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு இருப்பதுபற்றி பிரச்சினை எழுந்தபோது, அத்தகைய விளம்பரப் பலகைகள் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டதே! உம் என்பது இழிவு சிறப்பல்லவா?

இந்த நிலைக்குப் பிறகும், சிதம்பரம் நடராசர் கோயிலில் வழிபாடு கூட அல்ல; ஒரு மேடையில் ஏறி தமிழ்ப் பதிகங்களைப் பாடுவ தற்குப் போராடவேண்டியுள்ளது என்பது போற்றத்தக்கதல்ல!
 

தமிழர்களுக்கு மேலும் இன உணர்வும், மொழி உணர்வும், தன்மான உணர்வும் தேவைப்படுகின்றன. தந்தை பெரியார் கொள்கைகளை முழுமையாகத் தமிழர்கள் பற்றிக்கொண்டு செயல்படுவதைத் தவிர இதற்கு நிரந்தரத் தீர்வு கிடையாது - கிடையவே கிடையாது.


மீண்டும் தேவாரம் பாடினார் ஆறுமுகசாமி-தீட்சிதர்கள் மரியாதையை ஏற்க மறுப்பு
வியாழக்கிழமை, மார்ச்
6, 2008  

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில், திருச்சிற்றம்பலத்தில் ஆறுமுகசாமி ஓதுவார் இன்று தேவாரம் பாடல்களைப் பாடி வழிபட்டார். இன்று தீட்சிதர்கள் எந்தவிதப் பிரச்சினையும் செய்யவில்லை. மாறாக மீண்டும் மாலை, மரியாதை செய்ய வந்தனர். ஆனால், அதை ஏற்க ஆறுமுகசாமி மறுத்துவிட்டார்.

கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்ட ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட 46 பேரும் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டனர். முதல்வர் கருணாநிதியின் உத்தரவைத் தொடர்ந்து இவர்கள் கடலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி பிறப்பித்த உத்தரவின் நகல், சிதம்பரம் 2வது குற்றவியல் நீதிபதி வசந்தியிடம் வழங்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அனைவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு கடலூர் சிறை கண்காணிப்பாளர் முருகேசனிடம் வழங்கப்பட்டது. அதன் பேரில் ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட 33 பேரும், தீட்சிதர்கள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அதேபோல கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறார் சிறையில் அடைக்கப்பட்ட 2 சிறுவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆறுமுகச்சாமி, நடராஜர் கோவிலில் தொடர்ந்து தேவாரம் பாடல்களைப் பாடுவேன் என்று அறிவித்தார்.

அதன்படி இன்று காலை அவர் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். அவருடன் மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த ஐந்து வக்கீல்களும் உடன் வந்தனர்.

இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சென்று தாங்கள் திருச்சிற்றம்பலத்தில் தேவாரம் பாடப் போவதாக முறைப்படி தெரிவித்தனர்.

இதையடுத்து 6 பேரும் திருச்சிற்றம்பலத்திற்குள் சென்றனர். அங்கு ஆறுமுகசாமி ஓதுவார் பக்திப் பரவசத்துடன் தேவாரம் பாடினார்.

பாடி முடித்த பின்னர் அவருக்கு தீட்சிதர்கள் மாலை, மரியாதை செய்ய வந்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டு அங்கிருந்து வெளியேறினார் ஆறுமுகசாமி.

பெரியார் சிலைக்கு மாலை:

இதற்கிடையே, சிதம்பரத்தி்ல் மனித உரிமை பாதுகாப்பு மையம், விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகியவற்றின் தொண்டர்கள் பெரும் திரளாக ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

பட்டாசுகளையும் அவர் வெடித்தனர். தேவாரம் பாட அனுமதிக்கப்பட்டது தமிழுக்குக் கிடைத்த வெற்றி என்று கோஷமிட்டனர்.

மனித உரிமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜி கூறுகையில், தமிழுக்குக் கிடைத்துள்ள வெற்றி இது. முதல்வர் கருணாநிதியே இந்த வெற்றிக்குக் காரணம். இதற்காக அவருக்கு விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும் என்றார்.

இன்று நாட்டியாஞ்சலி:

இத்தனைக் குழப்பத்திற்கு மத்தியில் வருடா வருடம் நடக்கும் நாட்டியாஞ்சலி விழா இன்று சிதம்பரத்தில் தொடங்குகிறது.

5 நாட்களுக்கு நடைபெறும் இந்த நாட்டிய விழாவில், பல்வேறு நாடுகளையும் சேர்ந்த நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சிவனடியார்கள், தீட்சிதர்கள் மோதல் தொடர்பாக பதட்டம் நிலவுவதால் நாட்டியக் கலைஞர்களுக்கும், நாட்டியாஞ்சலி விழாவுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது..
 (Thats Tamil)

 


 

06-03-2008

 

ஆசிரியர்
தினமலர்
சென்னை.

 சிதம்பரம் கோவில் அசம்பாவிதம்!

சிதம்பரம் ஆடலரசன்  கோவிலில் பூசை நேரம் தவிர்த்து, இதர நேரத்தில் தமிழ் வேதங்களான தேவாரம், திருவாசகம் மற்ற பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் பாடலாம்' என்ற இந்து அறநிலைய ஆணையர் வழிகாட்டுதலில் குற்றம் ஒன்றும் காணமுடியாது ஆனால்  கடவுள் மீது நம்பிக்கையற்றோர் தூண்டுதலின் பேரில், பல ஆண்டுகளாக பூசை நேரத்திலே திருச்சிற்றம்பல மேடையிலே தேவாரம் பாடவேண்டுமென்ற தவறான முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இதில் ஆறுமுகசாமி என்பவர் அம்பு" என மருத்தவர் ராமசுப்ரமணியன் சென்னையிலிருந்து எழுதுயிருக்கிறார். திருச்சிற்றம்பல மேடையிலே தேவாரம் பாட ஆறுமுகசாமி என்ற அடியார் எடுத்த முயற்றி இன்றுநேற்று அல்ல. பல ஆண்டுகளாக அந்த முயற்சி நடந்து வந்துள்ளது.  ஆனால் கோவில் தீட்சிதர்கள் அப்படிப் பாட முயன்ற அடியார் ஆறுமுகசாமியை அடித்து மருத்துவமனைக்கே அனுப்பி வைத்துவிட்டார்கள். "பூசை  நடவாத நேரங்களில் நான் எத்தனையோ முறை திருச்சிற்றம்பல மேடையிலே தேவார, திருவாசகப் பாடல்களைப் பெரிதாகப் பாடியிருப்பதாக மருத்துவர் சொல்கிறார். அது சரியென்றால் பூசை நடக்கும் போது ஏன் அதே தேவாரம் திருவாசகம் பாடக்கூடாது? பாடினால் தீட்டு என்று சொல்வதை எந்தத் தமிழனும் - இறை நம்பிக்கை உள்ளவன் இல்லாதவன் - ஏற்றுக்கொள்ள மாட்டான். தமிழ் ஒதுக்கப்பட்டதன் காரணமாகவே இந்தச் சிக்கலில் இறை நம்பிக்கை அற்றவர்கள் தலையிட நேர்ந்தது.  இது  மனிதவுரிமைச் சிக்கல். தமிழ்நாட்டில் தமிழ்மொழி பயன்பாடு பற்றிய சிக்கல். இதில் இறை நம்பிக்கை உள்ளவர்கள்தான் தலையிட முடியும் மற்றவர்கள் தலையிடக் கூடாது என வாதாடுவதில் பொருள் இல்லை. தமிழர்களில் ஒரு சாரார் திருக்கோயிலுக்குள் நுழைய மதத்தின்  பெயரிலும் கடவுள் பெயரிலும் தடை விதிக்கப்பட்ட போது அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களில் இறை நம்பிக்கை அற்றவர்களும் இருந்தார்கள்.  இன்னும் சொல்லப்போனால் இறைநம்பிக்கை அற்ற பெரியார்தான் அந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். பெரிய பெரிய கோயில்களைக் கட்டிய மன்னர்கள் எல்லோரும் தமிழ் மன்னர்களே. சிதம்பரத்தில் உள்ள நடராசர் கோயில் தமிழ்  மன்னர்களால் கட்டப்பட்டது,  பராந்தகச் சோழன்தான் தில்லைக் கோயில் கருவறையின் மேற்புறத்திற்குப் பொன் வேய்ந்தான் என்பது வரலாறு. 

 தமிழ்நாட்டுத் தண்ணீரைக் குடித்துக்கொண்டு, தமிழ்நாட்டின் காற்றை சுவாசித்துக் கொண்டு தமிழன் கொடுக்கும் அருச்சனைப் பணத்தில் வாழ்ந்தாலும் தில்லைச் தீட்சிதர்களது சமற்கிருதப்  பற்றும் தமிழ்மொழி வெறுப்பும் சாதித் திமிரும் சற்றேனும்  குறையாமல் இருக்கிறது. இப்போது கோயில் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும் என்று தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுக்க  தமிழக அரசு தீட்சதகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்செரிக்க  ஆறுமுகசாமி மற்றும் அடியார்களுக்கு தீட்சிதர்கள்  மாலைகள் அணிவித்து மரியாதையுடன் திருச்சிற்றம்பலத்திற்குக் கூட்டிச்சென்று தமிழ் மந்திரங்களைப் பாட வைத்துள்ளனர். இதனை எப்போதோ அவர்கள் செய்திருந்தால் மத நம்பிக்கை அற்றவர்கள் இதில் தலையிட்டிருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். தீட்சிதர்கள் தங்கள் சமற்கிருதப் பற்றை வீட்டோடு வைத்திருக்க வேண்டும். அடுத்து நந்தன்  உட்புகுந்த காரணத்தால் தீட்டுப்பட்டு விடடதென்று மூடி வைத்திருக்கும் கோயிலின் ஒன்பதாவது வாசல் திறக்கப் படவேண்டும். அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆகலாம் என்ற சட்டம்  நடைமுறைப்படுத்த வேண்டும். உலக மதங்களில் இந்து மதம் ஒன்றே மனிதர்களை வருணங்களாக - சாதிகளாக - கூறுபோட்டு தள்ளி வைக்கிறது. அதனை ஒழிப்பது இந்து மதத்துக்கே நல்லது.

 

அன்புடன்

 

நக்கீரன்

                                                            கனடா

சிதம்பரம் கோவில் அசம்பாவிதம்!

டாக்டர் என்.ராமசுப்ரமணியன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: "சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூஜை நேரம் தவிர்த்து, இதர நேரத்தில் தமிழ் வேதங்களான தேவாரம், திருவாசகம் மற்ற பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் பாடலாம்' என்ற இந்து அறநிலைய ஆணையர் வழிகாட்டுதலில் குற்றம் ஒன்றும் காணமுடியாது.அறுபத்து மூன்று நாயன்மார்கள் பெருமை பேசும் பெரிய புராண நுõலை எழுத, "உலகெலாம்' என்று சேக்கிழார் பெருமானுக்கு தில்லைத் திருக்கூத் தனே அடியெடுத்துக் கொடுத்தான். தேவாரப் பாடல்கள் தில்லைக் கோவிலிலிருந்து தான் நமக்குக் கிடைக்கப் பெற்றன.திருவாசகம், திருக்கோவையார் பாடல்களை மாணிக்கவாசகர் பாட, தானே அவற்றை எழுதி, "திருச்சிற்றம்பலமுடையான்' என்று, ஆடவல்லானே கைச்சாத் திட்டான். "என்னை இறைவன் நன்றாகப் படைத்திட்டான் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்று இறைவனே தமிழில் தோத்திரம் செய்வதை விரும்புவர் என்று குறிப்பிடுகிறார்.தமிழ் வேதங்களில் தில்லைவாணனைப் பாடித் தொழுதல் மிகச்சிறந்ததே. ஆனால், கடவுள் மீது நம்பிக்கையற்றோர் துõண்டுதலின் பேரில், பல வருடங்களாக பூஜை நேரத்திலே திருச்சிற்றம்பல மேடையிலே தேவாரம் பாடவேண்டுமென்ற தவறான முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆறுமுகசாமி என்பவர் அம்பு; எய்தவர்கள் இறை நம்பிக்கை அற்றவர்கள். தமிழ்தோத்திரம் எனும் பொய்யான முகமூடி அணிந்தவர்கள்.இதற்குப் பின்னணி என்னவெனில், சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர்களிடமிருந்து கைப்பற்றி, அரசுடமையாக்கலாம் என்ற திட்டமே. இந்து அறநிலைய ஆணையர் அறிவிப்பு வந்ததும், தீட்சிதர்கள் ஆறுமுகசாமியை மட்டும் திருச்சிற் றம்பல மேடையில் அனுமதித்து, தேவாரம் பாடச் சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து, போலீசுடன் கைகலப்பு வரை சென்ற நிகழ்ச்சி நல்லதல்ல. ஆனால், ஆறு முகசாமியைத் தொடர்ந்து இதுபோல பல நிகழ்வுகள் வரலாம் எனக் கருதிச் செயல் பட்டிருக்கலாம்.பூஜை நடவாத நேரங்களில் நான் எத்தனையோ முறை திருச்சிற்றம்பல மேடையிலே தேவார, திருவாசகப் பாடல்களைப் பெரிதாக வாய்விட்டுப் பாடாமல் பாடியிருக்கிறேன். என்னைப் போல் நடராஜப் பெருமான் பக்தர்கள் ஏராளமானோர் இன்றும் பாடி வருகின்றனர். தீட்சிதர்கள் அவர்களை தடுத்ததில்லை.சூழ்ச்சியாளர்களுக்கு தேவாரத்திலோ, தமிழிலோ பற்று கிடையாது. தில்லைக் கோவிலைத் தமிழ்ப்பாடல் என்ற பெயரில் கைப்பற்ற முனையும் கூட்டமே இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.தீட்சிதர்கள் 80 சதவீதம் பேர் ஏழ்மையில் வாடுகின்றனர். சைவர்களுக்கு கோவில் என்றாலே சிதம்பரம் தான். மகாசிவராத்திரி நேரத்தில் பல தீட்சிதர்கள் சிறை சென் றுள்ளது, அக்கோவில் மீது ஈடுபாடு கொண்ட பக்தர்களுக்குப் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது.
 


 

சிதம்பரத்தில் ஆடலரசன்  கோவிலை அரசுடைமையாக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்த வேண்டுகோளை அடுத்து  தமிழக அரசு   தில்லைத்  தீட்சிதகர்களை  கடுமையாக எச்சரித்தது.  தமிழக அரசு எச்சரிததன் காரணமாகவே தீட்சிதகர்கள் எங்கே முதலுக்கே மோசம் வந்துவிடுமோ என்று பயந்து இப்போது ஆறுமுகசாமி மற்றும் அடியார்களுக்கு மாலைகள் அணிவித்து மரியாதையுடன் திருச்சிற்றம்பலத்திற்குக் கூட்டிச்சென்று தமிழ் மந்திரங்களைப் பாட வைத்துள்ளனர். இதனை எப்போதோ தமிழக அரசு செய்திருக்கலாம். அடுத்ததாக நந்தன் உட்புகுந்த காரணத்தால் தீட்டுப்பட்டு விடடதென்று மூடி வைத்திருக்கும் கோயிலின் ஒன்பதாவது வாசல் தி